Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, August 8, 2012

தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற்றிட வழிவகுக்கும் – ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் ஜிப்மர் நிர்வாகத்தின் கட்டண உயர்வை அறிவிப்பைத் ரத்து செய்திடுக

0 comments

பத்திரிகைச் செய்தி

தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற்றிட வழிவகுக்கும் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் ஜிப்மர் நிர்வாகத்தின் கட்டண உயர்வை அறிவிப்பைத் ரத்து செய்திடுக

        1956ல் துவங்கப்பட்ட ஜிப்மர் மருத்துவமனை அனைத்துப் பகுதி மக்களுக்கு தரமான, கட்டணம் இல்லாத மருத்துவ சேவையினை செய்து வந்தது. புதுச்சேரி மற்றும் தமிழக மக்களுக்கு உயிர்காக்கும் மருத்துவமனையாக இயங்கிவருகிறது. இதில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் பங்களிப்பும் மகத்தானதாகும். மேலும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களையும் உருவாக்கி நாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறது.

      முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் மத்திய ஆட்சியாளர்களால் சட்டம் இயற்றப்பட்டது. புதுச்சேரி ஜிப்மர் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனச் சட்டம் 2008 இயற்றப்பட்டு ஜுலை 14 முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையை தனியார்மயத்திற்கு தள்ளிவிடும் காங்கிரஸ் தலைமையிலான பாமக, திமுக உள்ளிட்ட கூட்டணி ஆட்சியின் நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், ஜிப்மர் ஊழியர்கள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் போராட்டக்குழு அமைத்து தொடர்ந்து போராடி வந்தன. மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த போராட்டமாக ஜிப்மர் மருத்துவமனை பாதுகாப்பு போராட்டம் அமைந்தது. இதன் விளைவாக ஜிப்மர் மருத்துவமனை தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு வருகை தந்து அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் மற்றும் மாநில அரசின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. ஆனாலும் காங்கிரஸ் தலைமையிலான ஜ.மு.கூ அரசும், சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அன்புமணியும் மக்களின் பெருவாரியான கருத்துகளுக்கு மாறாக சட்டம் இயற்ற முற்பட்டது.

      இலவச மருத்துவ சேவை, இலவச மருத்துவக் கல்வி, வேலைவாய்ப்பில் புதுச்சேரி இளைஞர்களுக்கு முன்னுரிமை மற்றும் ஊழியர் நலன் ஆகிய அம்சங்களை உறுதிப்படுத்திட வலியுறுத்தப்பட்டன. இறுதியாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தால் நடைமுறையில் இருந்துவருகிற மேற்குறிப்பிட்ட அம்சங்களுக்கு குந்தகம் இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்படும் என போராட்டக்குழுவிடம் ஆட்சியாளர்களால் உறுதியளிக்கப்பட்டது. ஜிப்மர் நிர்வாகம் 14.07.2012 தேதியிட்ட சுற்றறிக்கையில் 16.07.2012 முதல் அனைத்துவித நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை மற்றும் உணவு கட்டணம் என அனைத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கு இணையான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மாத வருமான ரூ.2499க்கு மேல் உள்ள அனைவரிடமும் மருத்துவ சேவைக்கான கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகத்தின் இத்தகைய மக்கள் விரோத கட்டண உயர்வு தனியார் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும். உயர்த்தியுள்ள மருத்துவ சேவைக்கட்டணத்தை நிர்வாகம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

{p.t.o }
      மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாரளமயக் கொள்கையின் அமுலாக்கத்தால் சமூகப் பொறுப்புகளில் இருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதாரம் காசு பணம் உள்ளவர்களுக்குத்தான் என்ற நிலையை உருவாகியுள்ளது.  இத்தகைய தவறான கொள்கையை கைவிட வேண்டும். இலவச மருத்துவ சேவை, இலவச மருத்துவக் கல்வி, புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஊழியர் நலன் ஆகிய முந்தைய நடைமுறை தொடரும் என்று ஜிப்மர் போராட்டக்குழுவிற்கு அளித்த உறுதிமொழியை பின்பற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. மேலும் மாநில மக்கள், அரசியல் மற்றும் ஜனநாயக சக்திகள் நமது ஜிப்மர் மருத்துவமனையை பாதுகாத்திட ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவண்


{வெ. பெருமாள்}

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com