பத்திரிகை செய்தி
புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் சட்டப்பேரவை உரை மாநில அரசின் திசையில்லாத கொள்கையை கொண்டதாக, மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையை அம்பலப்படுத்தியதாக உள்ளது. 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த முறையாவது முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் துணைநிலை ஆளுநரின் உரையில் திட்டக்குழு துணைத்தலைவருடன் நடத்தும் கலந்தாய்வு கூட்டம் இதுவரை நடைபெறாத காரணத்தால் இடைக்கால வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடுகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். மேலும் புதுச்சேரி சட்டப்பேரவை துவங்கி பொன்விழா ஆண்டை நிறைவு செய்கிற சூழலில் இடைக்கால பட்ஜெட் என்பது சட்டப்பேரவை வரலாற்றில் தவறான முன்னுதாரணமாகும். இதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
துணைநிலை ஆளுநர் உரையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மாநில சுயாட்சிக்கும், மாநில வளர்ச்சிக்கும் எதிராக செயல்படுகிறது என்ற உண்மை குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட திட்ட ஒதுக்கீட்டில் மத்திய அரசு அளிக்க வேண்டிய கொடையில் ரூ.126 கோடி வழங்கப்படவில்லை; நகர மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.41 கோடி வெட்டு வந்துள்ளது; 800 கோடி ரூபாய்க்கு திட்ட கருத்துரை வழங்கியும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவி கிடைக்கவில்லை போன்ற காரணத்தால் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே கடந்த பட்ஜெட்டிற்கான திட்ட செலவு நடந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இதன் மூலம் மத்திய காங்கிரஸ் அரசு மாற்றுக்கட்சி ஆட்சி என்ற தன்மையில் மாநில சுயாட்சிக்கும், வளர்ச்சிக்கும் எதிரான நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பது மீண்டும் நிருபணமாகிறது. என்றாலும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும், கொள்கையும் ஆளுநர் உரையில் இல்லை.
மாநிலத்தின் பொருளாதாரம் உயர்வதர்கு நிலப்பாதுகாப்பு, விவசாய மற்றும் தொழில் வளர்ச்சிக்கான கொள்கைகள் குறித்து ஏதும் இடம்பெறவில்லை. மாநில அந்தஸ்து, உள்ளாட்சித் தேர்தல், உணவு பாதுகாப்பு, பஞ்சாலைத் தொழில்களை நவீனப்படுத்தி மாநிலத்தின் முதலீட்டு வருவாயை அதிகரிப்பது, வரிபாக்கியை வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் துணைநிலை ஆளுநர் அறிக்கை வசதியாக மறந்துவிடுகிறது. LDC உள்ளிட்ட பல்வேறு அரசு காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்குவது, செண்டாக் கல்வி உதவி, பென்சன், முதியோர் உதவி போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தடுமாற்றம் குறித்தும் ரூ.300 கோடி ரூபாய் அளவிற்கு மின்கட்டண உயர்த்தப்பட உள்ளது குறித்தும் ஆளுநர் அறிக்கை மௌனம் சாதிக்கிறது. சட்டப்பேரவை பொன்விழா குறித்தும் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
மாநிலம் முன்னேற, மக்கள் வாழ்வாதாரம் உயர, மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான மாற்றுக் கொள்கையை உருவாக்க வேண்டியது அவசர அவசியமாகும். ஆகவே, மாநிலத்தின் நிதிபாக்கியை ரத்து செய்து மாநில அந்தஸ்து பெற்றிட, மாநிலத்தின் பொருளாதாரம் உயர, வலுவான மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்தும், இடதுசாரி கட்சிகளுடன் இனைந்தும் நடத்தும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. மாநில மக்களும் இத்தகைய போராட்டங்களுடன் மாற்றுக் கொள்கைக்கு ஆதரவு தரவேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியின் பிரதேச குழு கேட்டுக்கொள்கிறது.
இவண்
(வெ.பெருமாள்)
செயலாளர்














