
தோழர் பி.ராமமூர்த்தி 1955ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலையில் பணிபுரிந்த அவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் கட்சியிலும், விவசாய அரங்கத்திலும் அரும்பணியாற்றினார். 1957ம்ஆண்டு ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல் மாநில அரசு கொண்டுவந்த பாதகமான நிலச்சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி ஐந்து மாத காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறையில் தன்னுடன் இருந்த சில தலித் தோழர்களுக்கு சிறையிலிருந்து விடுதலையான பின்னர் பாராட்டுவிழா நடத்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதால் சாதி விலக்கம் செய்யப்பட்டார். அதன் விளைவாக அவரது சகோதரி திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.
புதுச்சேரி பிரதேசத்தில் 1974லிருந்து தீக்கதிர், செம்மலர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, சிந்தா, தேசாபிமானி போன்ற பத்திரிகைகளின் விற்பனை பொறுப்பை ஏற்று தனது கடைசிகாலம் வரை அதனை சிறப்புறச் செய்து வந்தார். தோழர் பி.ராமமூர்த்தி திருமணம் செய்துகொள்ளவில்லை. தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் தனக்கு கிடைத்த கணிசமான நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி பிரதேச குழுவிற்கும் விழுப்புரம் மாவட்டக்குழுவிற்கும் வழங்கியுள்ளார்.
ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டத்திலும், பின்னர் புதுச்சேரி பிரதேசத்திலும் கட்சி வளர்ச்சிக்காக அர்ப்பணிபோடு செயல்பட்டவர் தோழர் பி.ராமமூர்த்தி.அவரது மறைவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.