புதுச்சேரி,பிப்-18
நிதி நெருக்கடியில் இருந்து புதுச்சேரி மாநிலத்தை மீட்க அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் திங்களன்று (பிப்-18) புதுச்சேரி சட்டமன்றத்தில் சந்தித்து மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றும் பட்டியல் அடங்கிய மனு ஒன்றை அளித்தர்.இச்சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,கலிவரதன்,ராமசாமி,ராமச்சந்திரன்,பிரதேக்குழு உறுப்பினர் உலகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சுமார் 30நிமிடம் முதல்வரை சந்தித்து பேசிய பிறகு பின்னர் வெளியில் வந்த ஜி.இராமக்கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியது வருமாறு,யூனியன் பிரதேச பட்டியலில் இருந்த டில்லி,கோவா பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுவிட்டது. எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் மாநில அந்தஸ்து உடனே மத்திய அரசு வழங்க வேண்டும்.தற்போது புதுச்சேரியின் கடன் தொகை ரூ.4ஆயிரம் கோடிக்குமேல் உள்ளது.இந்த கடன் தொகைக்கு நாள் ஒன்றுக்கு மத்திய அரசுக்கு ரூ.1கோடி வட்டியாக செலுத்தப்படுகிறது.இதனால் மாநில வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்ற தேவையான நிதியின்மையால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது.எனவே இந்த 4ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் புதுச்சேரியில் இருப்பதால் மாநில தலைமை செயலாளர்,நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை மாற்றவும்,புதிய செயலர்களை நியமிக்கவும் அதற்கான அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு உள்ளது.தற்போது தலைமை செயலாளரை மாற்றியதில் எனக்கு எதுவும் தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறுவது சரியானதல்ல.எப்படி டில்லிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ அதேப்போல் புதுச்சேரிக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.எனவே மாநிலத்தின் நிதிநெருக்கடியிலிருந்து மாநில மக்களை பாதுகாக்கவும்,மாநில அந்தஸ்து பெறவும் உடனடியாக புதுச்சேரி முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றார்.மேலும் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற சுயேச்சையான போராட்டத்தையும் மேற்கொள்ளும் இவ்வாறு ஜி.இராமக்கிருஷ்ணன் கூறினார்.
